Header Ads

Breaking News
recent

எல்லா அப்பாவும் இப்படிதான்!!

வழக்கம் போல் இன்றும் என் மகளை (LKG) வீட்டிற்கு அழைத்துச் செல்ல பள்ளிக்குச் சென்றிருந்தேன். மணி அடித்ததும் வகுப்பறையில் இருந்து கள்ளமில்லாச் சிரிப்போடு வெளிவந்த என் மகளைக் கண்டதும் என் கண்கள் தானாக கலங்கியது. இப்போது கூட கலங்கிய கண்களுடன்தான் இதை பதிந்துக் கொண்டிருக்கிறேன்.

முதன் முதலாக என் மகளைப் பள்ளியில் சேர்க்க ஆயத்தமான பொழுது, நான் உறுதியாக இருந்தது
பள்ளியின் அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்பதில் தான். மாணவர்கள் நுழையும் வெளியேறும் வாசல், பள்ளி அறைகள், கட்டிடங்கள் இவற்றில் நான் எந்த சமரசமும் கொள்ளவில்லை. பள்ளி பேருந்தை குறைந்த பட்சம் நான்கைந்து நாட்களாவது அதன் பின்னாலே சுற்றியிருப்பேன். பின் சில காரணங்களுக்காக பள்ளி பேருந்தை நான் விரும்பவில்லை.

இதை படிக்கும் உங்களுக்கு நான் ஆர்வக் கோளாறாகவும், பைத்தியக் காரனாகவும் தோன்றும். சிலர் என்னிடம் நேரடியாகவே கேட்டனர் “நீ என்ன அதிசயமாகவா பிள்ளை பெற்றிருக்கிறாய்” என்று. அதையெல்லாம் சட்டை செய்யவில்லை. அப்போது என் மனதில் இருந்தது கும்பகோணம் பள்ளி தீ விபத்தும், ”ஸ்ருதி” பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டையின் வழியே தவறி விழுந்து இறந்ததும் தான்.

விபத்து நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் நடக்கத்தான் செய்யும் விதியை மாற்ற இயலாது என்று நீங்கள் கூறலாம். ஆனால் வருமுன் காப்பது சிறந்தல்லவா?

ஒருவனுக்கு எத்தனை செல்வங்கள் இருந்தாலும், அதில் மகிழ்ச்சி தரக் கூடியது மழலைச் செல்வங்கள் தான். தன் குழந்தை இறந்து விட்டது அதிலும் தீக்கிரை, விபத்து ... இதெல்லாம் ஒரு பெற்றோருக்கு எவ்வளவு கொடுமையான செய்தி.. நினைத்துப் பார்த்தாலே ஒரு படபடப்பாக இருக்கிறது.

இச்சம்பவம் நடைபெற்ற போது நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது இச்சம்பவம் நடைபெற்றதற்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது இன்றும் என் நினைவில் உள்ளது.

ஆனால் ஒரு தந்தையான பிறகு இன்று அதன் நினைவுகளால் இதயம் மிகவும் கனத்து விட்டது.
பெற்றோர்கள் இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளைப் புறக்கணிக்க வேண்டும். இது அந்த பெற்றோர்களுக்கு மீட்டெடுக்க முடியாத இழப்பு.


Courtesy 
 சார்லஸ் பா

No comments:

Powered by Blogger.